இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தும் விடையமாக சிறுவர் துஷ்பிரயோகம் காணப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இது பெரும் சவாலாக உள்ளது. சிறுவர் துஸ்பிரயோகமானது எல்லா நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் சிறுவர்களின் சுதந்திரம், உரிமைகள் இல்லாமல் ஆக்கப்படுகின்றது. சிறுவர்களின் பாதுகாப்பிற்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் இந்த துஷ்பிரயோகமானது அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது சிறுவர்கள் உடல் உள ரீதியாக தாக்கத்துக்கு உள்ளாக்கப்படுதல் சிறுவர் துஷ் பிரயோகம் எனப்படும். அதாவது சிறுவர்கள் தமது இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைதலைக் குறிக்கின்றது.
சிறுவர் துஷ்பிரயோகங்களாக
- தொழிலிற்கு அமர்த்துதல்
- பாலியல் தொல்லைகளுக்கு உள்ளா தல்.
- மது போதை, புகைப்பிடித்தலுக்கு அடிமையாதல்.
- இள வயதில் கர்ப்பம் தரித்தல்.
- தண்டனைக்கு உள்ளாதல்.

சிறுவர் துஷ்பிரயோகங்களை ஏற்படுத்துபவர்கள்
- பெற்றோர்கள்
- ஆசிரியர்கள்
- வளர்ப்பு பெற்றோர்கள்
- பாதுகாவலர்கள்
- உறவினர்கள்
- அயலவர்கள்
- தொழில் வழங்குபவர்கள்
போன்றவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பல்வேறு வழிகளில் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகங்களை வழங்குகின்றனர். இதனால் சிறுவர்கள் உடல், உள தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். துஸ்பிரயோகத்தினால் மாணவர்களின் கற்றல்கள் பாதிப்படைகின்றது.
உடல்ரீதியான துஷ்பிரயோகங்கள்
உடல்ரீதியான துஷ்பிரயோகங்கள் எனப்படுவது சிறுவர்களுக்கு அடித்தல், சிறுவர்களை துன்புறுத்தல், சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் அவர்களின் அங்கங்களை சிதைத்தல், சிறுவர்களை காயப்படுத்துதல் போன்றவை உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் எனப்படும்.
உளரீதியான துஷ்பிரயோகங்கள்
உள ரீதியான துஷ்பிரயோகம் எனப்படுவது சிறுவர்களை மனதளவில் அவர்களை தாக்குதல் ஆகும். அதாவது சிறுவர்களின் நிராகரித்தல், சிறுவர்களை வார்த்தைகளால் துன்புறுத்தல், சிறுவர்களுக்கு சாபம் இடுதல், அவர்களைத் தரம் குறைவாக பேசுதல், மற்றவர்களுக்கு முன்பாக இழிவாக நடத்துதல், சிறுவர்களை தனிமைப்படுத்துதல் இவை அனைத்தும் சிறுவர்களை உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகிறான்.
பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்
பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் எனப்படுவது பாலியல் சொற்களை சொல்லுதல், சிறுவர்களை தேவையற்ற விதத்தில் தொடுதல், சிறுவர்களை தேவையற்ற விதத்தில் வருடுதல், பாலியல் இச்சைகளை தூண்டக்கூடிய காட்சிகளை பார்க்க வற்புறுத்துதல். போன்றவை பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் எனப்படும்.

சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் இடத்தை சிறுவர் துஷ்பிரயோகம் நிகழ்கின்றது அதாவது சிறுவனுக்குரிய உணவு, உடை, உறைவிடம், கல்வி என்பன அவனுக்கு கிடைக்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றான். குறிப்பாக குடும்பத்தில் நிலவும் வறுமையின் காரணமாக குடும்பத்தை சிறுவயதில் சுமக்கும் பொறுப்பு சிறுவர்களிடத்தில் ஏற்படுகிறது.அவர்கள் கல்வி கற்பதை நிறுத்திவிட்டு தொழிலிற்கு அமர்த்துகின்றார்கள். இதனால் இவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகும் சந்தர்ப்பம் உருவாகின்றது. எனவே உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
பாடசாலைக்குச் செல்லும் சிறுமிகள் தமக்கு பாடசாலைக்குச் செல்லும் பாதையிலும் பாடசாலை ஆசிரியர்களாலும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதனால் இவர்கள் கல்வி கற்க செல்வதற்கு தயங்குகிறார்கள். தனது பெற்றோர்களுக்கு இது தொடர்பான போதிய அளவு அறிவின்மையால் இதனை கூறுவதற்கு மிகவும் தயங்குகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அவர்களின் வீடுகளிலும் பாலியல் சீண்டல்கள் இடம்பெறுகின்றன அதாவது அவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள், உறவினர்கள், அயலவர்கள் மூலமும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி இளவயதில் கர்ப்பம் தரிக்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களது கல்வி உட்பட எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. இதனால் இவர்கள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் மிகுந்த தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

அடுத்து குடும்பத்தின் வறுமை காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை விட்டு வெளிநாடுகளில் வேலைகளுக்கு செல்வது சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும் மற்றுமொரு காரணமாகும். வெளிநாடு செல்லும் பொழுது தனது பிள்ளைகளை வேறொருவரின் பாதுகாப்பின் விட்டு செல்லுதல். இதன்போது பிள்ளை பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக கூடிய நிலை ஏற்படுகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக உடனே முறைப்பாடு செய்ய:
ஒரு குடும்பத்தில் மது போதைக்கு அடிமையாக இருக்கும் ஒரு தந்தை வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் சண்டை பிடித்தல், பிள்ளைகளுக்கு அடித்தல் போன்றவற்றால் பிள்ளைகள் விரக்திக்கு உள்ளாகின்றனர். இதனால் இவர்கள் சிறுவயதிலேயே மது போதை மற்றும் புகைப்பிடித்தல், கஞ்சா போன்றவற்றுக்கு அடிமையாகின்றனர்.
மது போதைக்கு அடிமையாகும் போது அவர்கள் பல்வேறுபட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூகத்தினால் இவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். சமூகத்தினால் சிறுவர்கள் ஒதுக்கி வைக்கப்படும் பொழுது விரக்தி அடைந்து மேலும் பல குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்களால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுதலும் சிறுவர் துஷ்பிரயோகமாக கருதப்படுகின்றது. அதாவது ஒரு மாணவன் கல்வி கற்பதில் சிரமப்படும் பொழுது அவர்களை உடல் ரீதியாக தாக்குவது மட்டுமின்றி அவர்களை மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு அவர்களை இழிவுபடுத்தி பேசுவதுல் . ஒதுக்கி வைப்பதன் மூலமும் அவர்கள் உடல், உள ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் இவர்கள் கல்வி கற்பதை விட்டுவிட்டு இடை விலகி ச் செல்கின்றனர்.
சிறுவர் துஷ்பிரயோகத்தின் மூலம் ஏற்படும் விளைவுகள்
- சிறுவர்கள் உடல்ரீதியாக பல்வேறுபட்ட துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
- சிறுவர்கள் உளரீதியாக பல்வேறுபட்ட தாக்கத்திற்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர்.
- புத்தகப் பை சுமக்கும் தோள்களில் மூட்டைகளை சுமக்கும் நிலை ஏற்படுகின்றது.
- சிறுமிகள் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் நிலையும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
- சிறுவர்கள் குடும்பத்தின் வறுமை காரணமாக பாடசாலையை விட்டு இடை விலகும் தன்மை காணப்படுகின்றது.
- சமூகத்துக்கு சட்டவிரோதமான மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல், கஞ்சா அடித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல்.
- பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுகின்றது.
- சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்படுகின்ற நிலை இச்சிறுவர்களுக்கு ஏற்படுகின்றது. இதனால் இவர்கள் அன்பு அரவணைப்பு இன்றி தவிக்கும் நிலை ஏற்படுகின்றது.
- சிறுவர்கள் கொலை களவு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதால் சிறுவயதிலே சிறைச்சாலைக்குச் சென்று தண்டனையைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள்
- சிறுவயதிலேயே பாடசாலை கல்வியில் பாலியல் தொடர்பான கற்கை நெறிகளைக் கொண்டு வருதல்.
- ஒவ்வொரு நாட்டிலும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சட்ட திட்டங்களை வலுப்படுத்துதல்.
- பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல்.
- கிராமங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு இது தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல்.
- சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கங்களை மக்கள் பாவனையில் வைத்திருத்தல்.
- வறுமையில் வாடும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களின் பொருளாதார நிலைக்கு உதவுதல்.
- சிறுவர் துஸ்பிரியோகம் தொடர்பான விளக்கத்தினை பெற்றோர்களுக்கு உரிய முறையில் வழங்குதல்.
- சிறுவர்களுக்கு தங்களது அடிப்படை சுதந்திரம் மற்றும் உரிமைகள் தொடர்பாக போதிய விளக்கத்தினை வழங்குதல்.
- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நம்பிக்கையை வழங்குதல்.
- சிறுவர் துஷ்பிரியோகத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்கும் தண்டனைகள் பற்றி விளக்கம் அளித்தல்.
மேலே குறிப்பிட்டது போன்று சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சிறுவர் துஸ்பிரியோகங்களை குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் இன்றுவரை சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை பெற்று சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக செயல்படுதல் வேண்டும் இவ்வாறு செயல்படும் பொழுது சிறுவர் துஷ்பிரயோகம் நிகழ்வதை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் நல்லதொரு சிறார்களை உருவாக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் ஆகும்.
